Cwc 2011
யுவி-க்கு முன் தோனி களமிறங்கியது எந்த சுயநலமும் இல்லை - முத்தையா முரளிதரன்!
ஐசிசியின் 2023ஆம் ஆண்டிற்கான ஒருநாள் உலகக்கோப்பை வரும் தொடர் அக்டோபர் 5ஆம் தேதி முதல் இந்தியாவில் கோலாகலமாக நடைபெறுகிறது. இதில் சொந்த மண்ணில் வலுவான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் இந்தியா 2011 போல கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக 2011 உலக கோப்பையில் சச்சின், சேவாக் போன்ற சீனியர்களையும் விராட் கோலி, சுரேஷ் ரெய்னா போன்ற அனுபவம் கலந்த இளம் வீரர்களையும் சிறப்பாக வழி நடத்திய தோனி தலைமையில் ஆரம்பம் முதலே சீரான வெற்றிகளை பெற்று, நாக் அவுட் சுற்றில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தானை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
அதைத்தொடர்ந்து மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை ஜெயவர்த்தனே சதத்தால் 275 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அதை துரத்திய இந்தியாவுக்கு சேவாக், சச்சின் ஆகியோர் ஆரம்பத்திலேயே அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுக்க விராட் கோலியும் போராடி அவுட்டானார். அதனால் 114/3 என தடுமாறிய இந்தியாவுக்கு அடுத்ததாக நல்ல ஃபார்மில் இருக்கும் யுவராஜ் சிங் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.